Wednesday, October 10, 2012

'கவிக்கோ' அப்துல் ரகுமானின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து:

1)கண்ணீரின் ரகசியம்....

'இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்

அவன் கண்ணீரைத் தந்தான்

‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்

இறைவன் கூறினான்:

மழை வேண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு என்று
எந்த உழவனாவது கேட்பானா

ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்

கண்ணீரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்

உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்

வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?

புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!

மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?

கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?

முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம்தானே அது

கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!

மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது

புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது.

2)கொடுக்கிறேன்.....

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்

கொடு
நீ சுகப்படுவாய்

கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும்.

No comments:

Post a Comment